புனே: ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் வருத்தமடைந்துள்ள நிலையில் அவரோ ஜாலியாக செய்துள்ள ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. இதில் அவரது மனைவியும் உடன் சேர்ந்து விளையாடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியை வென்றுள்ள இந்திய அணி நாளை நடைபெறவுள்ள 2வது ஒருநாள் போட்டிக்காக தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஓய்வு நேரத்தின் போது இந்திய அணி வீரர்கள் விளையாட்டு தனமாக சில விஷயங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ரோகித் சர்மா செய்துள்ளது பேசுப்பொருளாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் 2வது ஒருநாள் போட்டிக்காக தயாராகி வருகிறது. முதல் போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 2வது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல் வெளியானதால் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

ஆனால் ரோகித் சர்மா அப்படி ஏதும் நடக்காதது போன்று ஜாலியாக சக வீரர்களுடன் விளையாடி வருகிறார். நேற்று கொரோனா பரிசோதனையின் போது தன்னை கிண்டல் செய்த ரிஷப் பண்ட்-க்கு நடு விரலை காட்டி அசிங்கப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று யுஸ்வேந்திர சஹாலுடன் மேலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முறை ரோகித் சர்மாவுடன் அவரது மனைவியும் சமூக வலைதளத்தில் விளையாடியுள்ளார்.
இந்திய வீரர் சஹால், ரோகித் சர்மாவுக்கு பூ கொடுப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் 'செனோரிட்டா' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, சற்றும் தாமதிக்காமல் கோபமாக முறைப்பது போல் ஒரு எமோஜியை கமெண்ட் செய்துள்ளார். இவர்கள் மூவரும் சமூகவலைதளங்களில் செய்த இந்த அட்டகாசம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.