மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அஜித் அகர்கர் தவறு செய்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்று முதல் வரும் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது துபாயில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா விளையாடும் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை கடைசி நேரத்தில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தேர்வு செய்தார். அதேபோன்று பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இது மிகவும் அதிகம் என நான் நினைக்கின்றேன். நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தாலே அது போதுமானது. இதன் மூலம் ஆடுகளம் எவ்வாறு செயல்படும். நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது குறித்து தெளிவில்லாமல் இந்த முடிவை எடுத்து இருக்கலாம். ஏற்கனவே நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஒரு தொடக்க வீரரை மாற்றி விட்டு ஐந்தாவதாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
இதேபோன்று வேக பந்துவீச்சாளராக சிராஜை சேர்த்திருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல மாற்று வீரராக இருந்திருப்பார். சிராஜ் அனுபவசாலியாக இருக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணா தான் செயல்பட்டார். ஹர்சித் ராணாவின் செயல்பாட்டை இந்திய அணி நிர்வாகம் விரும்பி இருப்பதால்தான் அவரை தேர்வு செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.இனி சிராஜை விட ஹர்ஷித் ராணா தான் அதிக ஆதரவை இந்திய அணி நிர்வாகம் வழங்கும் என நினைக்கின்றேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.