மும்பை: இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என்றும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அந்த செய்திகளை எல்லாம் ஊதித் தள்ளி இருக்கிறார் ரோஹித் சர்மா.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணித் தேர்வு ஜனவரி 18 அன்று காலை நடைபெற உள்ளது. அப்போது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருடன், ரோஹித் சர்மாவும் இருப்பார் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம், ரோஹித் சர்மா தான் ஒருநாள் அணியின் கேப்டன் என்பது உறுதியாகி இருக்கிறது.

இந்திய அணி கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடைந்தது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் படுமோசமாக இருந்தது.
இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா அனைத்து இந்திய அணிகளில் இருந்தும் நீக்கப்படுவார் என கூறப்பட்டு வந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கூட அவருக்கு இடம் கிடைக்காமல் போகலாம் என வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. ஆனால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 18 அன்று இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சந்திப்பின்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் போட்டி வடிவில் ஆடப்படும் தொடர் எனும் நிலையில் அந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கேப்டனாக ரோஹித் சர்மாவும், அனுபவ வீரர்களாக விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.
அத்துடன் யார், யாருக்கு இடம் கிடைக்கும்? யார் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள்? பும்ரா மற்றும் முகமது ஷமி இடம் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.