துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வரலாற்றில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் முதல் ஐந்து வீரர்களின் பட்டியல் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலில் இருக்கும் ஐந்து வீரர்களில் நால்வர் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இரண்டு வீரர்கள் தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இது பற்றி முழு விவரத்தையும் பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் குறைந்தது 10 இன்னிங்ஸ் ஆடிய வீரர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது அதிக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஐந்து வீரர்கள் -

விராட் கோலி
ஷிகர் தவான்
சவுரவ் கங்குலி
டேமியன் மார்ட்டின்
ரோஹித் சர்மா
இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி 12 இன்னிங்ஸ்களில் 529 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 88.26. ஷிகர் தவான் இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 701 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 77.9 ஆகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 11 இன்னிங்ஸ்களில் 665 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 73.9 ஆகும். ஆஸ்திரேலிய வீரர் டேமியன் மார்ட்டின் 492 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 61.5.
தற்போதைய இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 481 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 53.4 ஆகும். இந்த ஐந்து வீரர்களிலேயே அதிக ரன் குவித்தது ஷிகர் தவான் தான். அவர் 701 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இந்த முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு வீரர் மட்டுமே இந்தியர் அல்லாதவர். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேமியன் மார்ட்டின். மற்ற நால்வரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்போது நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளனர். அதனால் முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அவர்கள் சிறப்பாக விளையாடியதை போலவே இந்த முறையும் சிறப்பாக விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.