துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே துபாயில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. கடந்த முறை வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இரு அணிகளும் பல பரிட்சை நடத்துகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ, இந்திய அணியை நாங்கள் வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்," எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் எங்கள் அணியின் பேலன்ஸ் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் நாளை சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். எங்களுடைய நாளில் நாங்கள் உலகில் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்துவோம். இந்த தொடரில் இருக்கும் அனைத்து அணிகளுமே சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல தகுதி உடைய அணிகள் தான்".
"ஆனால் நான் எங்கள் எதிர் அணியை குறித்து யோசிக்காமல் எங்களுடைய திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து தான் யோசித்து வருகிறோம். எங்களுடைய வேகப்பந்து வீச்சு சமீப காலமாக சிறப்பாக செயல்படுகிறது. நகித் ராணா, டஸ்கின் அஹமத் ஆகியோர் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுகிறார்கள். இரவு நேரத்தில் மின்விளக்கில் வெளிச்சத்தில் பந்து ஸ்விங் ஆகும்".
"இதன் மூலம் எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். கடந்த ஆண்டு வங்கதேசம் மண்ணில் நாங்கள் இந்தியாவை எதிர்கொண்டு வீழ்த்தி இருக்கிறோம். இதனால் எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தினாலே எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக நாளை அமையும்".
"துபாயில் இருக்கும் ஆடுகளம் எங்கள் நாட்டின் ஆடுகளம் போல் தான் இருக்கும். இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கின்றோம். நாங்கள் வேகப்பந்துவீச்சை மட்டும் நம்பி இல்லாமல் சுழற் பந்துவீச்சாளர்களையும் வைத்திருக்கின்றோம். எனவே பந்துவீச்சில் நாங்கள் நன்றாக செயல்படுவோம். துபாயில் இந்தியாவை விட எங்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன்" என்று வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ தெரிவித்துள்ளார்.