துபாய்: நடப்பாண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் சீனியர் வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஸ்டம்புகளை வைத்து தாண்டியா ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஜடேஜா கம்பீரை தூக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த இந்தியா, 8 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி சரித்திரம் படைத்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிர்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 76 ரன்களையும், கடைசி வரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களையும் விளாசினர்.
இந்த போட்டியில் வின்னிங் ஷாட்டை ஆடிய ஜடேஜா, ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் ஓய்வறையில் இருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கட்டிப்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் இளம் வீரர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மைதானத்திற்கு ஓடி வந்தனர்.
கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜாவை கட்டிப்பிடித்து கொண்டாடிய அவர், தொடர்ந்து டான்ஸ் ஆடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் கங்னம் ஸ்டைலில் டான்ஸ் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது, விராட் கோலி இதேபோல் கங்னம் ஸ்டைல் டான்ஸை ஆடி கொண்டாடினார்.
அதனை இவர்கள் மீண்டும் செய்துள்ளனர். அதேபோல் களத்திற்கு வந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீரை ஜடேஜா தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இன்னொரு பக்கம் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெற்றிபெற்ற ஸ்டம்புகளை எடுத்து தாண்டியா ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.