துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி துபாயில் விளையாடி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
நான்கு நாட்கள் இடைவெளியில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் துபாயில் கடும் வெப்பம் நிலவுவதால் முதலில் பந்து வீசும் போது இந்திய அணி பவுலர்கள் மற்றும் பில்டர்கள் அதிக அளவு சோர்வடைந்து விடுகின்றனர்.

இதனால் பலரின் உடல் பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு ஒரு வாரம் ஓய்வு கிடைத்திருக்கிறது. இனி இந்திய அணி வரும் மார்ச் இரண்டாம் தேதி தான் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. அதுவரைக்கும் இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, தமக்கு 36 வயதாகிறது.
இந்த வயதில் ஒரு வாரம் ஓய்வு என்பது எனக்கு தேவைதான். இளம் வீரர்களுக்கு வேண்டுமானாலும் இந்த காலம் வெறுப்பை கொடுக்கலாம். எங்களுக்கு கிடையாது என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கும் முகமது சமிக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.
இதனால் இருவருமே இந்தியா பந்து வீசும் போது சில ஓவர்கள் களத்தில் இல்லை. எனினும் இருவரும் போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து களத்திற்கு திரும்பினார்கள். ரோகித் சர்மாவுக்கு தசை பிடிப்பு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா ஒரு வாரம் ஓய்வில் இருக்கப் போகிறார். இதன் காரணமாக ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பதில் சந்தேகம் எழுகிறது.
இதேபோன்று முகமது சமிக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக கடும் வெப்பத்தில் விளையாடும் போது இதுபோல் சிக்கல்களை வீரர்கள் சந்திக்க நேரிடும். இதற்கு ஓய்வு மட்டுமே மருந்தாகும். இதனால் ரோகித் சர்மா மற்றும் முகமது சமி ஆகியோர் அடுத்த போட்டியில் விளையாடுவார்களா அவருடைய உடல்நலம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.