மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். இதன் மூலம் 5வது முறையாக இந்திய அணியை வழிநடத்தும் பெருமை ரோகித் சர்மாவுக்கு சேரும்.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த வீரர்களை தேர்வு செய்வது, யாரை விடுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய வீரர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள இர்பான் பதான், நான் தேர்வு குழுவின் தலைவராக இருந்தால் யார் சமீபகாலமாக சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன்.
கேஎல் ராகுல் 50 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக ஸ்ரேயாஸ்க்கு அப்படிப்பட்ட வாய்ப்பை யாரும் வழங்கவில்லை என நினைக்கின்றேன். இந்த இரண்டு வீரர்களும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய கவாஸ்கர், என்னை கேட்டால் நடுவரிசையில் நம்பர் நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவது வீரராக கே.எல் ராகுலையும், ஆறாவது வீரராக பண்டையும் சேர்ப்பேன்.
சஞ்சு சாம்சன் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டும். உங்கள் நாட்டுக்காக சதம் அடிக்கும் வீரர்களை எப்படி நீங்கள் அணியில் தேர்வு செய்யாமல் இருப்பீர்கள் என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். கவாஸ்கர், இர்பான் தேர்வு செய்த அணி விவரம் : ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, சுப்மான் கில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி.