துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரிலாவது கத்துக்குட்டி அணிகள் பல இடம்பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதற்கு வாய்ப்பே கிடையாது.ஒரு தவறு செய்தால் கூட தொடரை விட்டு நாம் வெளியேற கூடும்.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றியை குறி வைத்தே ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் விளையாட வேண்டும். இந்த சூழலில் ரோகித் சர்மாவுக்கு இது மிகப்பெரிய பரிட்சையாக பார்க்கப்படுவதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பை பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

இந்த சூழலில் இந்திய அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் பலம் என்றாலே அது பேட்டிங் தான். இந்த தொடரில் அனுபவமும் இளமையும் சரிசமமாக கலந்த ஒரு அபாயகரமான அணியாக இந்தியா விளங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, கில், ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டு இருக்கின்றது.
இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்கள் என்றால் இந்தியாவை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் கடுமையான காரியமாகும். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் ராகுல் நடு வரிசையில் ரன்கள் குவிக்க வேண்டும். இதே போன்று இந்தியாவின் மற்றொரு பலம் சுழற் பந்து வீச்சு. அக்சர் பட்டேல், ஜடேஜா, என இரண்டு தலைசிறந்த ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.
மேலும் குல்தீப் யாதவ், துபாயில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். இதை தவிர தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் அணியில் இருக்கின்றார். இதைத்தவிர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் அணியில் உள்ளார். இதனால், இந்தியாவின் சுழற் பந்துவீச்சு என்பது இந்த தொடரிலே பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவின் பலவீனம் என்றால் அது வேகப்பந்து வீச்சு மட்டும்தான். ஏனென்றால் உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா, இந்த தொடரில் இடம் பெறவில்லை. இதேபோல் முகமது சிராஜும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஒட்டுமொத்த பொறுப்பும் முகமது சமி மீது இறங்கி இருக்கிறது. சமி திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும்,அவர் காயத்தால் நீண்ட நாள் விளையாட வில்லை.
இதனால் சமி இந்தத் தொடரில் எப்படி பந்து வீசுகிறார் என்பதை பொறுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும். இதேபோன்று ஹர்திக் பாண்டியா ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக முதல் 10 ஓவரிலும் கடைசி பத்து ஓவரிலும் நாம் ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இந்தியா கவனம் செலுத்தி அன்றைய நாளில் சிறப்பாக விளையாடினால் இந்தியாவை எந்த அணியாலும் தடுக்க முடியாது.