மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது துபாய்க்கு பயணம் செல்ல உள்ளது? மற்றும் இந்த தொடருக்கு முன் இந்திய அணிக்கு பயிற்சி போட்டிகள் இருக்குமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று நாட்களில் இந்திய அணி துபாய்க்கு பயணம் மேற்கொள்ள உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பிப்ரவரி 12 அன்று நடைபெற உள்ளது.

அந்த போட்டி முடிந்து மூன்று நாட்களில் அதாவது பிப்ரவரி 15 அன்று இந்தியா அணி துபாய்க்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி துபாய்க்கு செல்லும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் முதல் போட்டி பிப்ரவரி 20 அன்று நடைபெற உள்ளது. இடையே நான்கு நாட்களுக்கு இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியுடன் சில மாற்று வீரர்களும் பயணம் செய்யக்கூடும். முன்னதாக இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ஒரு பயிற்சி போட்டி இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளதால் வேறு ஒரு அணியை அங்கு பயிற்சி போட்டிக்காக அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு பயிற்சி போட்டி ஏதும் திட்டமிடப்படவில்லை. பாகிஸ்தானில் விளையாடும் மற்ற அணிகளுக்கு பயிற்சி போட்டிகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு பயிற்சி போட்டி இருக்காது.
அதே சமயம் இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இது மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி தன்னை தயார் செய்து கொள்வதற்கான ஒரே வாய்ப்பாக அமைந்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 20 அன்று வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அடுத்து பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மார்ச் 2 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
பும்ராவுக்கு என்ன ஆச்சு? மருத்துவரை அழைத்த பிசிசிஐ.. சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து இறுதி முடிவு
இந்த மூன்று குரூப் சுற்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வென்றால் அல்லது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்தால் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.