மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுவாரா? என்பது குறித்து பிசிசிஐ இறுதி முடிவை எடுக்க உள்ளது. நாளை பும்ராவின் ஸ்கேன் முடிவுகளை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். எப்படியும் பும்ராவால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் அவசரப்பட்டு அவரை சாம்பியன்ஸ் ட்ராஃபி அணியிலிருந்து நீக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறது பிசிசிஐ. நாளை மருத்துவ அறிக்கையில் மீண்டும் போட்டிகளில் விளையாட நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் கூறினால் மட்டுமே பும்ரா சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார்.

பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி கட்ட அணியை அறிவிக்க வேண்டும். அதற்கு மேல் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெக்னிக்கல் கமிட்டியின் அனுமதி பெற்ற பின்னரே மாற்றம் செய்ய முடியும். ஆனால், பிசிசிஐ அப்படியும் கூட பும்ராவை அணியிலிருந்து நீக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பும்ராவை நாக் அவுட் போட்டிகளில் மட்டும் பயன்படுத்த ஒரு திட்டம் உள்ளது. அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவை பும்ராவுக்கு மாற்று வீரராக தேர்வு செய்ய ஒரு அவசர கால திட்டமும் கையிருப்பில் உள்ளது. அதற்காகவே ஹர்ஷித் ராணா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் ஏற்கனவே அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவும் வேகப்பந்துவீச்சாளராக செயல்படுவார் என்பதால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பிரச்சனை இல்லை. பும்ராவால் குரூப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாமல் போனாலும் அவர்கள் மூவரை வைத்து இந்திய அணி சமாளித்து விடும் எனக் கூறப்படுகிறது.
பும்ரா நாக் அவுட் போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.