மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஒரு வீரரால் மட்டுமே ஒரு அணி வெற்றி பெற முடியாது என கூறி உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெறாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இது குறித்து கபில் தேவ் கூறுகையில், "ஒரு அணியின் செயல்பாடு என்பது ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பது நல்ல செய்தி இல்லை தான். ஆனால் நமது அணி அங்கே விளையாட போகிறது. இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி சிந்திக்காதீர்கள்" என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ராணா ரன்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், இது சரியான தேர்வா? என்ற சந்தேகம் உள்ளது.

ஹர்ஷித் ராணாவை தவிர்த்து, மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் டி20 அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அணியில் உள்ளனர். அர்ஷ்தீப் சிங் ஒருநாள் போட்டிகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது இதுவரை தெரியாத ஒன்றாக உள்ளது.
முகமது ஷமி நீண்ட காலத்திற்கு பின் விளையாட வந்துள்ளார். அவர் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதும் சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி சிக்கலான ஒரு நிலையில் தான் இருக்கிறது. துபாய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய வேலை இருக்காது என்பதால் இந்திய அணி சற்று ஆறுதல் அடையலாம்.