மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடுவது குறித்து பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகி உள்ளது. அவருக்கு என்ன பிரச்சனை? என்பது பற்றியும், அவர் எப்போது விளையாட தயாராவார்? என்பது பற்றியும் முழுமையான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் வலி ஏற்பட்டது. அதனால், அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பத்து ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இந்தியா வந்தது முதல் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில் பும்ராவுக்கு முதுகில் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை என்றும், வீக்கம் மட்டுமே உள்ளது என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து அவர் முழுமையாக மீண்டு வர மார்ச் முதல் வாரம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம் தான். ஏனெனில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் பிப்ரவரி 20 முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ளன. அதன் பின் மார்ச் 4 மற்றும் மார்ச் 9 ஆகிய தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெறும்.
பும்ரா மார்ச் முதல் வாரத்தில் தயாரானாலும் நாக் அவுட் போட்டிகளில் மட்டும் தான் விளையாட முடியும். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பும்ராவின் முதுகு வீக்கம் சரியான உடன் நேரடியாக அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
அவர் குறைந்தது இரண்டு உள்ளூர் போட்டிகள் அல்லது பயிற்சி போட்டிகளில் விளையாடி அவரது உடற் தகுதியை நிரூபித்த பின்னரே தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கான உடற் தகுதி சான்றிதழை அளிக்கும்.
ஒருவேளை பும்ராவை அவசரகதியில் போட்டிகளுக்கு தயார் செய்து அனுப்பி, அவர் மீண்டும் காயத்தில் சிக்கினால் அது இந்திய அணிக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், எந்த அவசரகதியிலான முடிவையும் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.
இது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் மற்றொரு முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயமாக உள்ளது.