மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவது சந்தேகம்தான் எனவும், நியூசிலாந்து மருத்துவர் ஒருவர் அளிக்கும் அறிக்கையை வைத்துதான் அவர் விளையாடுவது முடிவு செய்யப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை பும்ரா நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.
இனி அவர் நியூசிலாந்து சென்ற பின் அந்த மருத்துவர் அவரை பரிசோதித்து அறிக்கை அளிப்பார். அதன் பின்னரே பும்ரா விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவு எடுக்கும். எனவே, பும்ரா 100 சதவீதம் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது என்பது அதிசயம் தான் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் பும்ரா ஆகிய இருவரும் மிகவும் நிதானமாக இருப்பதாகவும், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியே ஆக வேண்டும் என எந்த அழுத்தத்தையும் தங்களுக்கு தாங்களே விதித்துக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் விளையாட முடிவு செய்தாலும், நாக் அவுட் போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்பார்.
இதற்கு முன் 2022 பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட போது நியூசிலாந்தை சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ரோவன் ஸ்கவுட்டன் அவருக்கு சிகிச்சை அளித்து இருந்தார். அவரிடமே தற்போது மீண்டும் பும்ரா சிகிச்சை பெற இருக்கிறார். அவருக்கு தற்போது முதுகில் காயம் ஏற்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு இந்த காயம் ஏற்பட்டு இருந்தது.
அதன் பின் அவர் ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பும்ராவின் பெயர் சேர்க்கப்படவில்லை. அதே சமயம் 2025 சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும், நியூசிலாந்து மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதோடு, பும்ரா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்ற சூழ்நிலை உள்ளது. பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அல்லது ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.