மும்பை: சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19 முதல் தொடங்க உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீப காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட ஆட்டம் கூட சரியில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் ரோஹித் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், முன்னாள் கேப்டன் கபில் தேவ், ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியை ரசிகர்கள் விமர்சிப்பது பற்றி பேசியிருக்கிறார்.

ஒரு அணியின் கேப்டன் சரியாக விளையாடாத போது அந்த அணிக்கும் பிரச்சனை இருக்கும் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதே சமயம், இந்திய அணி சிறப்பாக விளையாடாததால் ரசிகர்கள் கோபமாக இருப்பது நியாயமானது எனவும் கூறி உள்ளார்.
இது பற்றி கபில் தேவ் பேசுகையில், "ரோஹித் சர்மா ஒரு பெரிய வீரர். அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன். பயிற்சியாளருக்கு நான் வாழ்த்துக்கள் கூறுகிறேன். இந்த விஷயம் செட்டில் ஆக நேரம் எடுக்கும். நாடு முழுவதும் அணியின் ஆட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில், இந்திய அணி சிறிது காலம் நன்றாக விளையாடியது. தற்போது இந்திய அணி நிலையற்றதாகத் தெரிகிறது. கேப்டனின் ஃபார்ம் மோசமாக இருக்கும்போது, அணிக்கு பிரச்சினைகள் இருக்கும்," என்றார் கபில் தேவ்.
அணியின் அண்மை சரிவு மற்றும் அதன் பின்னர் ரசிகர்களின் அதிருப்தி குறித்து, உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசுகையில், "அணி சிறப்பாக விளையாடவில்லை; அதனால் ரசிகர்கள் கோபமாக இருப்பது நியாயமானது தான். 2024 டி20 உலகக் கோப்பையை வென்று வீரர்கள் திரும்பியபோது, நான் என் வாழ்க்கையில் பார்த்திராத பைத்தியக்காரத்தனமான காட்சிகள் அரங்கேறின."
"எனவே, அவர்கள் மோசமாக விளையாடும்போது, விமர்சனம் வரும். அதைத்தான் நான் சொல்கிறேன், வீரர்கள் கையாள முடியாத அளவுக்கு அவர்களை அதிகமாகப் புகழாதீர்கள். பின்னர் அவர்களை மோசமாக விமர்சிக்காதீர்கள். இது எனது கருத்து." என்றார் கபில் தேவ்.