துபாய்: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சாம்பியன் டிராபி தொடர் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இதில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை 20 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
அனைவரின் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் 23ஆம் தேதி நடைபெறும். இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. முஹம்மது சிராஜும் இந்திய அணியின் சேர்க்கப்படாத நிலையில், 34 வயது வீரரான முகமது சமி தான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பும்ராவை விட ஷமிதான் அபாரமாக பந்து வீசினார்.
அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பும்ரா சாம்பியன் பவுலர் ஆக இருந்தாலும், சமிக்கு அனுபவம் இருக்கின்றது. பும்ரா வருகைக்கு முன் ஷமிதான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தலைவராக இருந்தார். இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் சமி புதிய பந்தில் அபாரமாக பந்து வீச வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
முதல் ஆறு ஓவர்களில் புதிய பந்தை பயன்படுத்தி ஷமி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்காக இருக்கும். பழைய பந்தை வைத்து தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் எதுவும் செய்ய முடியாது. தற்காப்பு ஆட்டத்தை தான் ஒவ்வொரு அணியும் ஆடுகிறது.
இதன் காரணமாக புதிய பந்தை பயன்படுத்தி ஆரம்ப கட்டத்திலேயே சில விக்கெட்டுகளை நாம் வீழ்த்தினால், அது இந்திய அணியின் வெற்றிக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தும். சமிக்கு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அவர் கொஞ்சம் மெதுவாக பந்து வீசுவது போல் தெரிகிறது. இதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயம் என்பது ஒரு பகுதி.
ஷமிக்கு அனுபவம் இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டு வருவார். தன்னுடைய உடல் நிலையை அவர் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் அவர் பயிற்சி செய்ய வேண்டும். 12 ஆண்டுகளாக சமி இங்கே கிரிக்கெட்டுக்கு பல சாதனைகளை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சமியின் பங்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எனவே புதிய பந்தில் சமி விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது அவருடைய நம்பிக்கையை மட்டுமல்லாமல் மற்ற பலர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் என பாலாஜி கூறியுள்ளார்.