லாகூர்: ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணி அனைத்து ஐசிசி தொடரிலும் சிறப்பாக செயல்படும். ஆனால் தற்போது அந்த அணி தொடர்ந்து முதல் சுற்றிலே வெளியேறி வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
2023 உலகக்கோப்பை, 2024 டி20 உலக கோப்பை, தற்போது 2025 சாம்பியன்ஷிப் என அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலே வெளியேறி இருக்கிறது. அவர்கள் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் சாம்பியன்ஸ் கோப்பை வென்றார்கள்.

அதன் பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரிலும் பாகிஸ்தான அணி சாதிக்கவில்லை. தொடர்ந்து இந்திய அணியிடம் ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தோல்வியை தழுவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "ஒவ்வொரு தொடர் வரும்போதும் அதற்காக தயாராகிறோம் என்று நாம் பேசுகிறோம். ஆனால் தயாராகுவதற்கு முன்பே நாம் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கி விடுகின்றோம். அதன் பின் அறுவை சிகிச்சை பற்றி பேசுகிறோம்."
"ஆனால் உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் இருக்கின்றது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரை எதை வைத்து தேர்வு செய்தீர்கள். உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடினாரா?"
"அப்படி இருக்கும் போது, எப்படி இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நாம் எடுக்கும் முடிவில் நிலையாக இல்லை. தொடர்ந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கின்றோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவில் கொஞ்சம் கூட தெளிவு இல்லை. பயிற்சியாளர் மற்றும் கேப்டன்கள் தலை மீது எப்போதும் கத்தி தொங்க விட்டிருந்தால் அவர்களால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்."
"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் மோஷின் நக்வி, கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது என்று அவரே என்னிடம் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது தெரிந்தவர்களையாவது அருகில் வைத்துக் கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
மாறாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர் தோல்விகளை தழுவினாலும் அவர்கள் மீண்டும் தங்கள் கேப்டன் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறார்கள்.இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று சையது அப்ரிடி கூறியுள்ளார்.