மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறி இருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணிக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் இந்திய அணியே ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது .இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஸ்தாக் தலைமை பயிற்சியாளராக வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு சக்லைன் முஸ்தாக் சவால் விட்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "அரசியலை நகர்த்தி வைத்து நாம் பார்த்தோம் என்றால் இந்திய வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்."
"கடந்த சில காலமாக நல்ல கிரிக்கெட்டை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நிச்சயமாக இந்திய அணி நன்றாக தான் விளையாடி வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் பலத்தை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், எங்களுடன் அடிக்கடி விளையாட வேண்டும். பாகிஸ்தான் உடன் 10 டெஸ்ட், 10 ஒரு நாள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடட்டும்."
"அதன் பிறகு அனைத்தும் தெளிவாகிவிடும். நாம் சரியான முறையில் ஒவ்வொரு போட்டிக்கும் தயாராக வேண்டும். பிரச்சனைகளை தீர்த்து சரியான திசையில் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் நாம் உலகத்திற்கும், இந்தியாவிற்கும் பதில் சொல்ல முடியும்" என்று சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முஸ்தாக் 496 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.ஏற்கனவே தற்போது ஆகிப் ஜாவித் என்ற பாகிஸ்தான் பயிற்சியாளராக உள்ளார். அவரை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு பாகிஸ்தான் வீரரை பயிற்சியாளராக போட்டால், அது சரிவராது என்றும் வெளிநாட்டு வீரர்களை பயிற்சியாளர்களை கொண்டு வாருங்கள் என பாகிஸ்தான் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.