மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தான் களமிறங்க போகிறார் என்பதை பயிற்சியாளர் கம்பீர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆரம்ப கால பயிற்சியாளரான தேவேந்தர் சர்மா, ரிஷப் பண்ட் சாதாரண ஒரு வீரராக சாம்பியன்ஸ் கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், ரிஷப் பண்ட்டை நீங்கள் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாக சேர்த்தால் கூட அவர் அனிக்காக சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர், அவரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முடியும்.
50 ஓவர் கிரிக்கெட்டில், தம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதை அவர் பலமுறை காட்டியிருக்கிறார்.
விபத்து ஏற்பட்ட போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டி20 உலக கோப்பை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட கொடுத்திருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் கவாஸ்கர் திட்டிய பிறகு பண்ட், என்னை தொடர்பு கொண்டு பேசினார். ரிஷப் பண்ட் சூழலுக்கு தகுந்த மாதிரி ஆடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.
ஆனால் இதுதான் அவருடைய இயல்பான ஆட்டம். இதுவே அவர் அடித்த ஷாட் சிக்ஸருக்கு சென்றிருந்தால் பலரும் அவரை பாராட்டி இருப்பார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் அன்று தொய்வாக இருந்தது. மேலும் அது பெரிய மைதானம் என்பதால் சில சமயம் நாம் அடிப்பது கேட்ச் ஆக மாறி விடுகிறது.
ரிஷப் பண்ட்டை சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். அவர் மனதளவில் பலமானவர். கார் விபத்துக்கு பிறகு நான் அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தேன். வலியால் துடித்துக் கொண்டிருந்த போதும் அவருடைய எண்ணம் எல்லாம் கிரிக்கெட்டை நோக்கியே இருந்தது. அதன் பிறகு முழு உடல் தகுதியைப் பெற்று தற்போது விரைவாகவே சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனையாக இருக்கின்றது. கிரிக்கெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்க்க ஆசைப்படுவார்கள். ஏனென்றால் அவருக்கு பயமே கிடையாது.
இது போல் குணம் உள்ள வீரரை நாம் இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.
ரிஷப் பண்ட் வேண்டுமானால் சிறந்த விக்கெட் கீப்பராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அணியில் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அதில் ஒருவர் விக்கெட் கீப்பராக இருப்பது அணிக்கு நல்லது அல்ல. அதனை ரிஷப் பண்ட் சரியாக செய்து வருகிறார் என்று பயிற்சியாளர் தேவேந்திரன் சர்மா கூறியுள்ளார்.