மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி அணியை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேப்டன் ரோஹித் சர்மா குறிப்பிட்ட கேள்வியால் எரிச்சல் அடைந்தார். பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படி அறிவித்தால் அப்போது அதைப்பற்றி பேசலாம் என்று கூறினார்.
பின்னர் அருகில் இருந்த அஜித் அகர்கர் அதை சமாளிக்கும் வகையில் சில விளக்கங்களை அளித்தார். சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் பின்பற்ற வேண்டிய 10 விதிமுறைகளை ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஆனால், அது பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வமான பக்கங்களில் வெளியாகவில்லை.

பிசிசிஐ அதிகாரிகள் மத்தியில் அந்த விதிமுறைகள் பகிரப்பட்டு இருந்தது. அது ஊடகங்களிலும் கசிந்தது. அந்த புதிய விதிகளின்படி இனி இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை, பயிற்சிக்கு செல்லும் போதும், போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே பேருந்தில் தான் பயணிக்க வேண்டும், உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என்பன போன்ற விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.
இது பள்ளிக்கூட சிறுவர்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகளை போல உள்ளதாக ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை எதிர்கொண்ட உடன் எரிச்சல் அடைந்தார் ரோஹித்.
"உங்களுக்கு யார் இந்த விதிகளை பற்றி கூறியது? இது அதிகாரப்பூர்வமான பக்கங்களிலிருந்து வெளியானதா? முதலில் இந்த விதிகள் அமலுக்கு வரட்டும். அதன்பின் நாம் இதைப் பற்றி பேசலாம்." என்றார். இதன் மூலம் பிசிசிஐ-யின் இந்த விதிகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுந்தது.
அப்போது அஜித் அகர்கர் இது பற்றி பேசி சமாளித்தார். "இது பள்ளிக்கூடம் அல்ல. இது தண்டனையும் அல்ல. இந்திய அணிக்காக ஆடும் போது சில விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். இவர்கள் யாரும் பள்ளிக்கூட சிறுவர்கள் இல்லை. இவர்கள் நட்சத்திர வீரர்கள். அவர்களை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு தெரியும். நீங்கள் நாட்டுக்காக ஆடுவதால் இந்த விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு நிறைய விதிகள் உள்ளன. அவற்றை நாம் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது." என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் இனி இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது மட்டுமே அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ரோஹித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருப்பதையும் உறுதி செய்து இருக்கிறார்.
ஆனால், குடும்பத்தினரை தொடர்களின் போது உடன் அழைத்துச் செல்லக்கூடாது. உதவியாளர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்பது போன்ற விதிகள் பற்றி அவர் பிசிசிஐ -யிடம் பேச இருப்பதாக தெரிகிறது. பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன் அவர் இது குறித்து அஜித் அகர்கரிடம் கூறி இருந்தார்.