மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை அறிவிக்க வேண்டி பிசிசிஐ சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மைக் செயல்பாட்டில் இருப்பது தெரியாமல் கேப்டன் ரோஹித் சர்மா தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருந்தது. இனி இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது அழைத்து செல்ல அனுமதி இல்லை என்பது முக்கிய விஷயமாக இருந்தது. அது பற்றி தேர்வுக் குழு கூட்டத்தில் பேசுமாறு சக இந்திய வீரர்கள் தனக்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டே இருப்பதாக ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம் கூறினார்.

மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன் நாம் இதை பற்றி பேச வேண்டும் எனவும் அஜித் அகர்கரிடம் தெரிவித்தார். மைக் செயல்பாட்டில் இல்லை என நினைத்த கேப்டன் ரோஹித் சர்மா, அஜித் அகர்கரிடம் மட்டும் பேசுவதாக நினைத்து இதை கூறினார்.
ஆனால், மைக் செயல்பாட்டில் இருந்ததால் இது நேரலையிலும் ஒளிபரப்பானது. ஊடகவியலாளர்கள் நிறைந்து இருந்த அரங்கில் அவர் இதை பற்றி பேசி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், ரோஹித் சர்மா செய்த இந்த செயலால் பிசிசிஐ-இன் விதிகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய அணி வீரர்கள் எதிர்பார்ப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் ஆடுவது பற்றியும், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இனி அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என அஜித் அகர்கர் சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்போது ரோஹித் குறுக்கிட்டார். அதற்கு வீரர்களின் சார்பில் ஒரு விளக்கத்தை அளித்தார் ரோஹித். தாங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதற்கான நேரம் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கூறினார்.