மும்பை: சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி தோற்றாலும் ரோகித் சர்மாவுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இதனால் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு என்றும் இதில் அவர் இந்திய அணியை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் அவருடைய கேரியரே முடிந்துவிடும் என்று செய்திகள் வெளியானது.

இதனால் கடும் நெருக்கடியில் ரோகித் சர்மா இருந்து வருகிறார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பட்டையை கிளப்ப வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹமது கைஃப், "கேப்டனாக ரோகித் சர்மா செய்த விஷயத்தை யாராலும் செய்ய முடியாது".
"2023 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை அவர் கொண்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு நாம் பெரிய அளவு ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. கடவுள் காப்பாற்றட்டும். ஒருவேளை இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோசமாக விளையாடினால், பயிற்சியாளருக்கு தான் பிரச்சனை வரும் தவிர ரோகித் சர்மாவுக்கு எந்த பிரச்சனையும் வராது".
"டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் ரோகித் சர்மா தன்னுடைய இடத்தை இழக்கலாம். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா இடம் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழாது. ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருக்கின்றார் சமீபமாக சதம் அடிப்பிருக்கிறார். இந்திய அணியின் சிறப்பான முறையில் தலைமை தாங்குகிறார். அவரின் ஒரு நாள் ரெக்கார்ட் சிறப்பாகவே இருக்கின்றது".
"கேப்டனாக வெற்றி சதவீதமும் அதிகமாக இருக்கின்றது. எனவே இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோசமாக விளையாடினாலும், ரோகித் சர்மாவின் இடம் பாதுகாப்பாகவே இருக்கும். அவர் 2027 உலக கோப்பை வரை நிச்சயம் விளையாடுவார்" என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.