மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அட்டவணை தயாரிப்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா செல்லாததால் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் நியூசிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு சென்று விட்டன.
ஆனால் நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் முடிவில் தான் எந்த அணி புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் நிறைவு செய்கிறது என தெரியும். அது தெரிந்த பின்பு தான் எந்த அணி யாரை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவரும்.

ஆனால் இதில் பிரச்சனையே இடையில் ஒரு நாள் இருப்பது மட்டும்தான். இந்தியா நியூசிலாந்து போட்டி முடிவடைந்த உடன் திங்கட்கிழமை மட்டும் தான் ஓய்வு. செவ்வாய்க்கிழமை முதல் அரை இறுதி நடைபெற வேண்டும். இதனால் எந்த அணி யாருடன் மோதுகிறது என்று தெரியாது என்பதால் தற்போது பி பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் துபாய்க்கு செல்ல icc உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி ஆஸ்திரேலிய அணி இன்று காலை துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணி இன்று இரவு புறப்பட்டு செல்லும். இதில் டிவிஸ்ட் என்னவென்றால், இந்தியா நியூசிலாந்து போட்டி முடிவடைந்த உடன் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்ளுமா இல்லை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளுமா என்பது தெரிந்து விடும்.
அதன்பிறகு துபாய் சென்ற இரண்டு அணியில் ஒரு அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி விடும். இதுதான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கோபம் அடைய வைத்திருக்கிறது. அரை இறுதியை வைத்துக் கொண்டு துபாய்க்கு நாங்கள் ஏன் புறப்பட்டு செல்ல வேண்டும் என்றும், இருநாட்டு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது என உறுதியாகிவிட்டால், தென்னாப்பிரிக்கா அணி துபாய் சென்று விட்டு மீண்டும் ஏன் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர். இது அட்டவணை தயாரித்ததில் ஏற்பட்ட மிகவும் முட்டாள்தனமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் நிறைவு செய்கிறார்கள் என்பதை வைத்துதான் யார் யாருடன் மோத போகிறார்கள் என்பது தெரியவரும். இதனை மாற்றி யார் அரையிறுதுக்கு சென்றாலும் இந்த அணிகளோடு தான் மோத போகிறது என்பதை முன்கூட்டியே முடிவு செய்து இருந்தால் இந்தத் தேவையில்லாத அலைச்சலும் பணம் விரையமும் ஆகாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.