மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்திய அணியில் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என்ற குழப்பத்தில் தேர்வு குழுவினர் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய வீரர்களின் ஒருநாள் கிரிக்கெட்டில் நீக்குவது சரியாக இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரராக இருக்கும் கில்லை நீக்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர், தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தான் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது தேர்வு குழுவினரின் பணி மிகவும் கடுமையாக இருக்கும்.
என்னை கேட்டால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக நான் இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலை தான் சேர்ப்பேன். ஜெய்ஸ்வாலை சேர்ப்பதன் மூலம் பல நன்மைகள் இருக்கிறது. வலது கை பேட்ஸ்மேனுக்கு நல்ல பந்தாக இருப்பது இடது கை பேட்ஸ்மேனுக்கு ஓய்டாக செல்ல கூடும்.
இதன் மூலம் கூடுதலாக ஒரு ரன்னும், கூடுதலாக ஒரு பந்து கிடைக்கும். எனவே எப்போதும் வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது போல் அணியை கட்டமைக்க வேண்டும். கூடுதலாக தற்போது பண்ட் கூட அணியில் இருக்கிறார்.இது நிச்சயம் மிகப்பெரிய வித்தியாசத்தை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஏற்படுத்தும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இதுவரை ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டிகள் கூட களமிறங்கியதில்லை. இதுவரை 32 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் களம் இறங்கியுள்ள ஜெய்ஸ்வால் சராசரியாக 53 ரன்கள் அடித்திருக்கிறார். அதேசமயம் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 48 ஒரு நாள் போட்டிகளில் 2328 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 13 அரை சதம் அடங்கும். கில்லின் சராசரி 58 என்ற அளவில் இருக்கிறது.இதனால் இம்முறையும் கில்லுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.