துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி முக்கியமான ஆட்டங்களில் சோக் ஆகிவிடும்.

இதனால் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை விட தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது தான் சிறந்தது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் எதிர்கொள்ளவே இந்திய அணி விரும்பும் என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "இரண்டு அணிகளுமே பலமான அணிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதில் எந்த தவறும் செய்ய வேண்டாம்.ஏனென்றால் அரையிறுதியில் நாங்கள் இந்த அணியை எதிர்கொள்வதுதான் சரி என்று இந்தியா நிச்சயம் கூறமாட்டார்கள். ஏனென்றால் இது நாக்அவுட் போட்டி. ஒரு தவறு செய்தாலும் தொடரை விட்டு வெளியேறிவிட வேண்டும்."
"இதனால் இந்த அணி வந்தால் நல்லது, கெட்டது என்று யாருமே அப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் விரும்புவார்கள் என நினைக்கின்றேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவை அதிக முறை இந்தியா எதிர்கொண்டு இருக்கிறார்கள். தென்னாபிரிக்காவை விட ஆஸ்திரேலிய வீரர்களை பற்றி தான் இந்திய வீரர்களுக்கு நன்றாக தெரியும்."
"நாம் தென்னாப்பிரிக்காவை கடைசியாக 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டோம். ஆனால் ஆஸ்திரேலியாவை நாம் அதிக முறை எதிர்கொண்டுள்ளோம். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய அணியில் தற்போது ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற வீரர்கள் யாரும் இல்லை. எனவே இப்படிப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்தியா நிச்சயம் விரும்பும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்."