மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், பும்ராவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஒரு வீரர் அதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பதும், அவரது பந்துவீச்சும் பும்ராவின் செயல்பாட்டை போலவே இருந்தது. அந்த வீரர் வருண் சக்கரவர்த்தி.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வருண் சக்ரவர்த்தி எப்படி சேர்க்கப்பட்டார் என்பது குறித்த ஆச்சரியம் அளிக்கும் அந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடவில்லை என்றால், அவரது இடத்தில் வருண் சக்ரவர்த்தியை அழைத்துச் செல்ல வேண்டும் என தேர்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக யாரும் யூகிக்க முடியாத ஒரு முடிவாகவே இருந்தது.

ஏனெனில், பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் முன், டி20 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். ஒருநாள் போட்டி சூழ்நிலையில் அவரால் அதே தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது தெரியாத நிலையில், பிசிசிஐ தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். அது இந்திய அணியின் வெற்றிக்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது.
வருண் சக்ரவர்த்தி கடந்த ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பிடித்து தொடர்ந்து விக்கெட் வேட்டையாடி வந்த நிலையில், அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கலாமா என்ற விவாதம் தேர்வு குழுவினரிடம் நடந்துள்ளது. இந்த நிலையில் தான், பும்ராவுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முடிவில் காயம் ஏற்பட்டது. அவர் விளையாட மாட்டார் என தகவலும் வெளியானது.
பும்ரா அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் அணியில் இருந்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. முகமது ஷமி அணியில் இடம் பிடித்தாலும், போட்டி நடக்கக்கூடிய துபாய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஷமி தனது 100 சதவீத உடற்தகுதியுடன் இல்லை என்பதும் நிலையில்லாத சூழ்நிலையாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில், வருண் சக்ரவர்த்தி உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய போது, அவரை தேர்வு குழுவினர் கவனமாக கண்காணித்தனர். அவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணிக்காக டி20 போட்டியில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதே தாக்கத்தை அந்த ஒருநாள் போட்டிகளிலும் அவர் ஏற்படுத்தினார். அப்போதே, "பும்ரா இல்லை என்றால் வருண் சக்ரவர்த்தி" என்ற முடிவை பிசிசிஐ-யின் தேர்வு குழுவினர் எடுத்து இருக்கின்றனர்.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் என நான்கு ஸ்பின்னர்கள் இருக்கும்போது, ஐந்தாவதாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்படுவார் என்பதை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடிந்திருக்காது. ஆனால், அது நடந்தது. மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருந்த ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கப்பட்டார்.
பிளேயிங் லெவனில் வருணுக்கு எப்படி வாய்ப்பு அளிக்கப்படும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதுவும் நடந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி எப்போதும் இல்லாத அளவுக்கு நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்தியது. அந்தத் திட்டம் வெற்றியும் பெற்றது. வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கியமான மூன்று போட்டிகளில் விளையாடி சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பவுலிங் சராசரி 15.11 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரெட் 20 என்பதாக இருந்தது. இவை அனைத்துமே கிட்டத்தட்ட பும்ராவின் செயல்பாட்டை ஒத்ததாக இருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியம். இதை முன்பே தேர்வு குழுவினர் யூகித்து, பும்ரா இல்லை என்றால் வருண் என்ற சரியான முடிவை எடுத்து இருக்கின்றனர். இந்திய அணியில் வருணை ஆட வைத்தது தேர்வு குழுவின் சரியான கணிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.