துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெறும் ஆறு போட்டிகள் தான் முடிந்த நிலையில் குரூப் ஏ பிரிவிலிருந்து இரண்டு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இந்த சூழலில் குரூப் பி பிரிவில் தற்போது தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.இங்கிலாந்தின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் இருந்தாலும், ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணி எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இங்கிலாந்து அணி தங்களுக்கு எஞ்சி இருக்கும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால் தற்போது இருக்கும் சூழலில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி ஏ பிரிவில் முதலிடத்தில் இருந்தால்,அவர்கள் அரையிறுதியில் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வார்கள். ஒரு வேளை ஏ பிரிவில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் நிறைவு செய்தால் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வார்கள்.
அதனால் அரையறுதியில் இந்திய அணி தற்போது உள்ள சூழலில் ஆஸ்திரேலியா அல்லது தென்னாபிரிக்காவை சந்திக்க நேரிடும். ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இங்கிலாந்தை இந்தியா சந்திக்கும். இந்திய அணி விளையாட போகும் அரை இறுதி ஆட்டம் மார்ச் 4ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால்,ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.