மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி வெள்ளி அல்லது சனிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தொடருக்கான அணியை அறிவிக்க வரும் 11ஆம் தேதியுடன் கெடு முடிவடைகிறது.
அதேசமயம் இந்த தொடருக்கு முன்பாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பு ஜனவரி மாதம் 22ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதனால் அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு மூன்று அணிகளை அறிவிக்க இருக்கிறது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் ஜெய்ஸ்வால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட், டி20 என அனைத்திலும் பட்டையை கிளப்பும் ஜெய்ஸ்வால் இதுவரை ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாடியதில்லை. எனினும் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பெற்றாலும் அவர் கூடுதல் தொடக்க வீரராக தான் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா, கில் ஆகியோர்தான் தொடக்க ஜோடியாக விளையாடுவார்கள்.
நடுவரிசையில் எப்போதுமே விராட் கோலி,கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோன்று ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பராக பண்டும், ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் விளையாட கூடும்.எட்டாவது இடத்தில் ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் இடம் பெறுவார்கள்.
ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கிறது. பத்தாவது இடத்தில் பும்ராவும் 11 வது இடத்தில் முகமது சமி அல்லது சிராஜ் விளையாட கூடும். ஹர்திக் பாண்டியாவை சேர்த்து இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட முடிவெடுத்தால் ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் என இரண்டு பேரில் யாராவது ஒருவர் தான் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களாக ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் விளையாடக்கூடும்.இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா, சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.