துபாய்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி வென்றதை அடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் கோப்பையை பெரும் முன் வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து கொண்டனர். இது ஏன் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது பற்றி இப்போது பார்க்கலாம்.
1998 முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 2009 முதலே இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் வழக்கம் உருவானது. அப்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு வெள்ளை நிற ஜாக்கெட் அளித்தது.

அனைத்து ஆஸ்திரேலியா வீரர்களும் அந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து, அதன் பின் 2009 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பெற்று அந்த வெற்றியை கொண்டாடினர். அதன் பின் இது ஒரு முக்கிய வழக்கமாக மாறியது.
இது பற்றி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், "அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை. அவர்கள் பல தலைமுறைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காக வழங்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது வெற்றிக்காக அனைத்தையும் முன்வைத்து விளையாடுவதை சுட்டிக்காட்டுகிறது" என்று கூறியுள்ளது.
இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை உருவாக்கியது ஒரு இந்தியர் தான். மும்பையைச் சேர்ந்த உடை அலங்கார நிபுணரான பபிதா என்பவர்தான் 2009 இல் இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை வடிவமைத்தார். மிகவும் விலைமதிப்பு உடைய இத்தாலிய நூலை கொண்டு அவர் இந்த ஆடையை உருவாக்கினார்.
2025 சாம்பியன்ஸ் தொடரில் நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 49 ஓவர்களில் 252 ரன்கள் என்ற இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையில் அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. முதலில் வருண் சக்கரவர்த்தி இந்த உடையை பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் இதை வாங்கிக் கொண்டனர். கேப்டன் ரோஹித் சர்மா கடைசியாக இதை வாங்கி அணிந்து கொண்டார். அதன் பின் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பெற்றார். அதை சக அணியினருடன் அவர் பகிர்ந்து கொண்டார்.