மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி சுற்றில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் மட்டும்தான் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் வருண் சக்கரவர்த்தியை எதிர்கொள்ள தனியாக ஸ்பெஷல் பயிற்சியை எடுத்து வருவதாக நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு கொஞ்சம் மர்மமாகவே இருக்கிறது. எங்களின் பல பேர் அவருடைய பந்துவீச்சை முதல் முறையாக எதிர்கொண்டார்கள். இதன் மூலம் தற்போது அவருடைய பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து வீரர்கள் தெரிந்திருப்பார்கள்."
"அன்றைய ஆட்டத்தில் போல் ஆடுகளம் மீண்டும் செயல்பட்டால் எங்கள் அணி வீரர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கும். ஏனென்றால் வருண் சக்கரவர்த்தியை தவிர மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். இதனால் இறுதி போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்திய அணி வீரர்கள் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்ற பழைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்."
"வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் என்ன ஆபத்து இருக்கிறது என்பது குறித்து நாங்கள் தெரிந்து கொண்டோம். குறிப்பாக என்னுடைய விக்கெட்டை வீழ்த்திய போது அவர் 115 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். அது மிகப்பெரிய ஆபத்துதான். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று தெரியும்."
"இதற்காக நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சாண்ட்னர் கூறியுள்ளார். பயிற்சியில் பந்து வீசப் போவதாகவும் அதன் பிறகு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் கடும் நெருக்கடி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள சான்ட்னர், யார் அன்றைய நாளில் சிறப்பாக விளையாடுவார்களோ அவர்கள் கோப்பையை வெல்வார்கள்" என்றும் கூறியுள்ளார்.