துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேட்சை கோட்டைவிட்ட கேப்டன் ரோஹித் சர்மா உட்பட 4 வீரர்களை இந்திய அணி ரசிகர்கள் விளாசி தள்ளி வருகின்றனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. வழக்கமாக இறுதிப் போட்டி என்றால் இரு அணிகளின் வீரர்களும் ஃபீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள். 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சேவாக் பறந்து பறந்து கேட்ச் பிடித்த சம்பவங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் 2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த டிராவிஸ் ஹெட் பிடித்த கேட்ச் ஆட்டத்தையே மொத்தமாக திருப்பிவிட்டது. இதனால் ஃபீல்டிங்கில் செய்யும் சின்ன விஷயம் கூட ஆட்டத்தின் ஒட்டுமொத்த போக்கையும் மாற்றிவிடும். அண்மையில் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சங்கக்காரா, ஜாண்டி ரோட்ஸ் பாய்ந்து சிறுத்தை போல் ஃபீல்டிங் செய்தது இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு மட்டும் 2 கேட்ச்களை இந்திய அணி வீரர்கள் கோட்டைவிட்டுள்ளனர். முதலில் முகமது ஷமி பவுலிங் வீசிய போது, கையில் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார்.
தொடர்ந்து சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் சுமார் 30 மீட்டர் தூரம் ஓடிவந்து கையில் விழுந்த பந்தை தவறவிட்டார். அதேபோல் நியூசிலாந்து அணிக்காக அரைசதம் அடித்த டேரல் மிட்சல் கொடுத்த கேட்சை கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். இந்த கேட்சை ரோஹித் சர்மா பிடித்திருந்தால், நியூசிலாந்து அணியை 230 ரன்களுக்கும் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
அதேபோல் கிளென் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் ஒன்றை சுப்மன் கில் தேவையில்லாமல் டைவ் அடித்து பிடிக்கிறேன் என்ற பெயரில் கோட்டைவிட்டார். இதனை பார்த்து விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் கோபத்தை களத்திலேயே வெளிப்படுத்தினர். மொத்தமாக 4 கேட்ச்களை இந்திய அணி தவறவிட்டுள்ளது. இதனால் இந்திய ஃபீல்டிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.