துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 15வது முறையாக டாஸை தொடர்ந்து இழந்து புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி துபாய் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 2000ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் துபாய் மைதானத்திலேயே இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் ஆடி வருவதால், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். துபாய் மைதானத்தில் சேஸிங் செய்வது எளிதாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற பின் நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இந்த பிட்ச் சிறப்பாக இருக்கிறது. கடந்த வாரம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை விளையாடிய பிட்சை போல் தெரிகிறது. பெரிய இலக்கை நிர்ணயித்து அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட வேண்டும். இந்திய அணியின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
இந்த பிட்ச் சிறிது நேரத்திற்கு பின் தேய்மானம் அடைந்து ஸ்லோவாக மாறும் என்று கருதுகிறேன். இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் முன் நின்று விளையாடி இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் மேட் ஹென்ரி-க்கு பதிலாக நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா பேசுகையில், இந்த மைதானத்தில் முதல் பேட்டிங், முதல் பவுலிங் இரண்டையும் செய்துள்ளோம்.
அதனால் 2வது பேட்டிங் ஆடுவதை பற்றி கவலையில்லை. ஏற்கனவே சேஸிங் செய்து வென்றுள்ளதால், அதிக நம்பிக்கையுடன் உள்ளோம். டாஸை எடுத்துவிட்டு பார்த்தால், எவ்வளவு சிறப்பாக களத்தில் ஆடினோம் என்பதே முக்கியம். ஓய்வறையிலும் டாஸ் பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம் என்று பேசினோம்.
கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடி வந்துள்ளது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை ஆடுவதே எங்களுக்கு இருக்கும் சவால். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.