துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி இதுவரை இரண்டு ஐசிசி தொடர்களை வென்றிருக்கிறது. இந்த இரண்டுமே இந்தியாவுக்கு எதிரானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்றாவது முறையாக நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ தளங்களான சாட் ஜி பி டி ஜெமினி மற்றும் குரூக் போன்ற ஏ ஐ தளங்களில் இந்தியா நியூசிலாந்து அணி போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கணித்திருக்கிறது. இதனை தற்போது பார்க்கலாம்.இது குறித்து google நிறுவனத்தின் ஜெமினி ஏஐ வெளியிட்டுள்ள கணிப்பில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்றும் ஐசிசி தொடரில் சமீபத்திய செயல்பாடுகளை காரணங்களாக குறிப்பிட்டுள்ள ஜெமினி ஏஐ, விளையாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கணித்துள்ளது. இதேபோன்று சாட் ஜிபிடி நிறுவனமும் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறது. இது குறித்து சாட் ஜிபிடி வெளியிட்டுள்ள கணிப்பில், இந்திய அணி தோல்வியே தழுவாமல் இறுதிப் போட்டிக்கு வென்று இருக்கிறார்கள்.
குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்திய அணியின் உள்ள முக்கிய வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். மேலும் துபாய் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள நிலையில் இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்று இந்திய அணியின் பலமாக குறிப்பிட்டுள்ளது.எனினும் இந்த போட்டி கடைசி வரை திரில்லிங்காக முடியும் என்றும் சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.
இதைப் போன்று எலான் மஸ்கின் குரூக் ஏஐ தளம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்த தொடரில் இந்தியாவே முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. இந்தியாவின் பவுலிங், பேட்டிங் நல்ல முறையில் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்து இருக்கிறது. மேலும் ஏ ஐ எதிர் காலத்தை கணிக்க கூடிய தளம் கிடையாது என்றும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் குரூக் குறிப்பிட்டுள்ளது.