சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவாமல் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் 2024 டி20 உலக கோப்பையையும் இந்திய அணி இதே பாணியில் தான் வெற்றி பெற்றது.
2023- 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் வந்து தோல்வியை தழுவியது. இந்த சூழலில் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் ஆறு ஐசிசி கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், இந்திய அணி ஐசிசி தொடர்களில் பிரமாதமாக விளையாடி வந்தாலும் நாக் அவுட் சுற்றில் தோல்வியை தழுவி வந்தது. இது நமது வீரர்களுக்கு மிகப்பெரிய சுமையையும் கவலையையும் தந்தது. ஆனால் 2024 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நாம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினோம்.
அதிலிருந்து அந்த சுமை நீங்கிவிட்டது. தற்போது இந்திய அணி வீரர்கள் முழு சுதந்திரத்துடன் விளையாடி வருகிறார்கள். மேலும் நம்மால் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இதனால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் எந்த நெருக்கடியையும் இன்றி விளையாடினார்கள்.
அது மட்டுமில்லாமல் இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது. இதேபோன்று அனுபவ வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. இப்படி இரண்டு தரப்பு வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்திய அணி பலமாக இருக்கிறது. மேலும் தற்போது இருக்கும் இளம் வீரர்கள் மேலும் 10 ஆண்டுகளுக்கு விளையாடுவார்கள்.
ஐபிஎல் உதவியால் நாம் இன்னும் நிறைய திறமையான வீரர்களை உருவாக்கியிருக்கிறோம். இதனால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்திய அணி குறைந்தபட்சம் ஆறு ஐசிசி தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும். இல்லையெனில் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளில் நாம் மூன்று அல்லது நான்கு கோப்பை யாவது கைப்பற்றுவோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷி குறித்து எனக்கு தெரியவில்லை ஆனால் வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் நாம் ஆதிக்கம் செலுத்துவோம் என்று
ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.