துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 76 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவர் மிக மோசமான ஒரு ஷாட்டை ஆட ஆசைப்பட்டு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார்
ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆமை வேக ஆட்டத்தால் கடுமையான அழுத்தம் ஏற்பட்டது. உடனடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற ரன் ரேட் அழுத்தத்தில் ரோஹித் சர்மா சிக்கியதால், ரச்சின் ரவீந்திரா வீசிய 27-வது ஓவரின் முதல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். ஆனால் அவர் பந்தை தவறவிட்டார். இதை அடுத்து ரோஹித் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. அடுத்ததாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இணைந்து இந்திய அணிக்கு அபாரமான துவக்கம் அளித்தனர். சுப்மன் கில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து இருந்தது. அணியின் ரன் ரேட் விகிதம் 5-க்கும் அதிகமாக இருந்தது.
ஆனால், அதன் பின் வந்த விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரமாக ரன் குவிக்க முடியாமல் திணறினார். நியூசிலாந்து அணி தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. அப்போது ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரால் விரைவாக ரன் சேர்க்க முடியவில்லை. பல ஓவர்களில் அணியின் ஸ்கோர் இரண்டை கூட தாண்டவில்லை.
26-வது ஓவரை ஸ்ரேயாஸ் ஐயர் சந்தித்த நிலையில், நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் அதை மெய்டனாக வீசினார். அப்போது இந்திய அணியின் ரன் ரேட் 5-ல் இருந்து சரிந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 22 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருப்பதை உணர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா ரச்சின் ரவீந்திரா வீசிய 27-வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடித்து விட வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.
ரோஹித் சர்மா அதற்கு தயாராக கிரீஸை விட்டு முன்னே நின்றார். தான் பந்து வீச வரும் முன் ரோஹித் சில அடி எடுத்து வைப்பதை ரச்சின் ரவீந்திரா உணர்ந்தார். பந்தை சற்று அகலமாகவும், கூடுதல் தூரம் சென்று பிட்ச் ஆகும் வகையிலும் வீசினார். எதிர்பார்த்தது போலவே ரோஹித் சர்மாவால் அந்த பந்தை அடிக்க முடியவில்லை. அவர் பந்தை தவறவிட்டார்.
விக்கெட் கீப்பர் டாம் லாதம் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். ரோஹித் சர்மா 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ரன் விகிதமும் குறைவாக இருந்த நிலையில், ரோஹித் சர்மாவின் விக்கெட் இந்திய அணிக்கு மேலும் அழுத்தத்தை அதிகரித்தது. 26.1 ஓவரில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து ஆடினர்.