லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இரண்டாவதாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்பது புதன்கிழமை இரவு தெரிந்துவிடும்.
அந்த வகையில் நியூசிலாந்து அணி பைனலுக்கு வருவது நல்லதா இல்லை தென்னாப்பிரிக்கா பைனலுக்கு வருவது இந்தியாவுக்கு நல்லதா என்பதை தற்போது பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு வந்திருக்கும் நான்கு அணிகளுமே பலமான அணிகள் தான்.

ஆனால் சில அணிகளை எதிர்கொள்வதன் மூலம் சில சாதக, பாதகம் இருக்கிறது. அந்த வகையில் இந்திய அணிக்கு நியூசிலாந்தை விட தென்னாபிரிக்காவை எதிர்கொள்வது சாதகமான விஷயமாகும். ஏனென்றால் இந்திய அணி அடிக்கடி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கூட இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தான் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் எப்படி விளையாடுவார்கள்? எப்படி பந்து வீசுவார்கள் என்று இந்திய வீரர்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற முக்கியமான போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது.
அதே சமயம் நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஒரு டேஞ்சராக தான் இருக்கிறது. அண்மையில் நடந்த கடைசி லீக் போட்டியில் கூட இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை நியூசிலாந்து கொடுத்தார்கள். மேலும் துபாய் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நியூசிலாந்து அணியில் நான்கு ஸ்பின்னர்கள் இருப்பதால் அது இந்தியாவுக்கு மேலும் ஆபத்தை தான் கொடுக்கும்.
மேலும் நியூசிலாந்து அணியில் பல அதிரடி வீரர்கள் தனி ஆளாக நின்று ஆட்டத்தை மாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும் பந்துவீச்சு, பேட்டிங் என பலமாக விளங்கினாலும் அவர்களை ஏற்கனவே எதிர்கொண்டு சமாளித்த அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறது.எனவே பைனலுக்கு நியூசிலாந்தை விட தென்னாப்பிரிக்கா வருவது தான் இந்திய அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.