துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பலரின் வயிறு எரிந்து கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வீரர்களுக்கு தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்," இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது."

"சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது."
"தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும். இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது."
"தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது. கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது."
"நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைட் எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்" என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.