துபாய்: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து மாபெரும் ஐசிசி கோப்பை சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் இருவரும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர். நான்கு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் அவர்கள் இருவர் மட்டுமே.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி மூன்று ஐசிசி கோப்பைகளை மட்டுமே வென்று இருக்கிறார். அவர் அதை கேப்டனாக வென்றிருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் தற்போதைய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வீரர்களாக நான்கு ஐசிசி கோப்பைகளை வீரர்களாக வென்று சாதனை படைத்துள்ளனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதை அடுத்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ரோஹித் சர்மா 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை வென்று இருக்கிறார். இதில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை அவர் கேப்டனாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். இருவரும் தலா இரண்டு உலகக் கோப்பைகளையும், இரண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்று உள்ளனர்.
இதில் ரோஹித் சர்மா ஒருநாள் உலகக்கோப்பையை இதுவரை வெல்லவில்லை. அவர் இரண்டு டி20 உலக கோப்பைகளையும், இரண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்றுள்ளார். விராட் கோலி ஒரு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையையும், ஒரு டி20 உலகக் கோப்பையையும், இரண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இது மட்டுமின்றி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இருவரும் சேர்ந்து மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதை ரோஹித் சர்மா மறுத்துள்ளார். தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார். விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.