துபாய்: 2011 உலகக்கோப்பை தோனி எப்படி இறுதிப் போட்டியில் விளையாடி அசத்தினாரோ, அதேபோல் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்து அசத்தியுள்ளார். சரியான நேரத்தில் கேப்டன் இன்னிங்ஸை ஆடி இந்திய அணியின் கேப்டன் என்பதையும் ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. அந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் தோனி இறுதிப்போட்டியில் 91 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அந்த போட்டிக்கு முன்பு வரை ஒரு இன்னிங்ஸில் கூட தோனி சிறப்பாக விளையாடவில்லை.

ஆனால் தேவையான நேரத்தில் ஃபார்முக்கு வந்து கேப்டன் இன்னிங்ஸை அடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அப்படியான ஒரு இன்னிங்ஸை தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் ஆடி இருக்கிறார். 2வது பந்திலேயே சிக்சர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ரோஹித் சர்மா, ஒரு ஓவரில் கூட கியரை குறைக்கவே இல்லை.
அரைசதத்தை நெருங்கிய போது, புல் ஷாட் அடித்த மாதிரியே இருந்தார். இதனால் 41 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக 100 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். 19 ஆண்டு கால ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.
அதிலும் விராட் கோலி, சுப்மன் கில் இருவரும் ரன்கள் சேர்க்க தவறிய போது, ஒரு கேப்டனாக தனியாக போராடி அசத்தி இருக்கிறார். அதிரடியாக ரன்களை குவித்த ரோஹித் சர்மா 83 பந்துகளில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 76 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா போட்டுக் கொடுத்த பாதையில் எளிதாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலமாக தோனியை போலவே சரியான நேரத்திற்கு ஃபார்முக்கு வந்து ரோஹித் சர்மா இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.