மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஆறாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா விளையாடுவார் என தெரிகிறது.
ஆனால் இது குறித்து இதுவரை பிசிசிஐ இறுதி முடிவை எடுக்கவில்லை. வரும் 11ம் தேதிக்குள் வீரர்களை மாற்றிக் கொள்ள ஐசிசி அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் பும்ரா அதற்குள் அணிக்கு திரும்புவாரா?

இல்லை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்காமல் போய்விடுவாரா என்ற சந்தேகம் இருந்துள்ளது.இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் பும்ரா இந்திய அணியில் இல்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பு வெறும் 30 சதவீதம் தான் இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "பும்ராவை பொருத்தவரை தற்போது அனைத்துமே ரிஸ்க் தான். இனி வரும் காலங்களில் இந்திய அணி நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போகிறது. பும்ரா இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க ஒரு வீரர் ஆவார். அவரை ஏதேனும் முக்கியமான ஆட்டத்தில் தான் பயன்படுத்தி அவரிடம் இருந்து வேலை வாங்க வேண்டும்".
"ஏனென்றால் பும்ரா மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கின்றது. பலரும் பும்ரா திடீரென்று களத்திற்கு வந்து பந்து வீச்சில் கலக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் காயத்திலிருந்து பந்து சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் கடினமானது".
"சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா மட்டும் முழு உடல் தகுதியை பெறாமல் விளையாடவில்லை என்றால் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு முப்பது சதவீதம் குறைந்துவிடும். பும்ரா மட்டும் முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக மாறும். டெத் ஓவரில் பும்ரா பந்து வீசும் போது அது ஒட்டுமொத்தமான முடிவையும் மாற்றும்" என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.