மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் இன்று முதல் தொடங்கி வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் பல ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
இந்த சூழலில் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழல் தற்போது முன்னேறி இருப்பதை அடுத்து பல நாடுகள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது.

எனினும் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா மட்டும் துபாயில் சென்று விளையாட முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தீவிர ஏற்பாடுகளை பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருக்கிறது.
அந்த வகையில் அறிவியல் உதவியையும் பாகிஸ்தான் நாடி இருக்கிறது. தற்போது உலகையே ஆதிக்கம் செலுத்தும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கிறது. இதற்காக பத்தாயிரம் ஏஐ கேமராக்களை பாகிஸ்தான் பொருத்தியிருக்கிறது. இந்த ஏ ஐ கேமராக்கள் சந்தேகத்திற்கிடமான நபர்களின் முகத்தை தானாகவே அறிந்து தீவிரவாதிகள், குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்.
இதேபோன்று சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் போலீசார் என சுமார் 20,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மைதானம், விமான நிலையம் மற்றும் வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்லும்போது அனைத்து வழிகளையும் அடைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரம் செய்துள்ளது.
இதேபோன்று வீரர்கள் செல்லும்போது ஸ்னைப்பர்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதேபோன்று 129 பெண் காவலர்கள் பெண் ரசிகர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஏற்பாடுகள் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி என மூன்று நகரங்களில் தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது.