மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்றால் அது ஷிகர் தவான் தான்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தவான், ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தொடரில் விளையாடி வருகிறார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து ஷிகர் தவான், தன்னுடைய கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறுவதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நான் இந்த தொடரை விளையாடும்போது மிகவும் விரும்பினேன். இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பதே கொஞ்சம் ஜாலியாக தான் இருக்கும்".
"ஆனால் என்னால் இந்தியாவை தாண்டி யோசிக்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். பும்ரா இல்லாதது நமக்கு கொஞ்சம் பின்னடைவு தான்".
"ஏனென்றால் உலகின் சிறந்த பவுலராக அவர் இருக்கின்றார். icc போன்ற பெரிய தொடர்களில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோல் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்களும் அணியில் இருப்பது நல்ல விஷயம் இது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தலாம். அவரின் உத்வேகம் எனக்கு பிடித்திருக்கிறது".
"ரன்கள் சென்றாலும் விக்கெட்டுகளுக்கு ஹர்ஷித் போராடுகிறார். இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக இருக்கின்றது. குறிப்பாக பேட்டிங்கில் அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக இருக்கின்றார்கள். இதே போல் கில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பார்முக்கு திரும்பி இருக்கிறார்கள்".
"நாங்கள் கடந்த முறை அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினோம். ஆனால் இம்முறை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் தொடர்ந்து நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதேபோன்று நியூசிலாந்தும் சமீப காலமாக நன்றாக விளையாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணி தடுமாறினாலும் அவர்களுடைய பேட்டிங் சிறப்பாக இருக்கின்றது" என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.