மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சொதப்பிய நிலையில், அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் அனைவரும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஃபார்மில் இல்லாமல் தவிக்கும் விராட் கோலி குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இது குறித்து பேசிய சோயிப் அக்தர், விராட் கோலியை நீங்கள் எழுப்பி விட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டி இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். அது போதும், மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த டி20 உலக கோப்பையில் அவர் என்ன மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை மட்டும் பாருங்கள்.
இதே போல் ஒரு ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் விளையாடுவார் என நான் நம்புகிறேன். துரதிஷ்டவசமாக ஷயிம் அயூப் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் பக்கர் சாமானுடன் இணைந்து எப்படி விளையாடுவார் என்பதை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. இருவரும் ஒன்றிணைந்து விளையாடினால் மிகவும் அபாயகரமான தொடக்க ஜோடியாக அமைவார்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்ல இந்தியா பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்படும் என நான் நம்புகிறேன்.
இரண்டு அணிகளுமே தற்போது தோல்வியை தழுவி வந்திருக்கிறது. எனவே இரண்டு அணிகளுமே அதிலிருந்து மீள வேண்டும். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. எனவே கோப்பையுடன் பாகிஸ்தான் வரவேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை பலமாக இருக்கிறது. இதில் பும்ரா ஒன் மேன் ஆர்மியாக இருக்கின்றார் என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார்.