மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் பல பெயர்களால் ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டது. முதலில் நாக் அவுட் கோப்பை என்றும் பின் சாம்பியன்ஸ் கோப்பை என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழக ரசிகர்கள் இந்த தொடரை மினி உலக கோப்பை என்று அழைப்பார்கள். தரவரிசையில் டாப் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த தொடரில் பங்கு பெறும். இந்த வகையில் முதல்முறையாக இந்த தொடர் 1998 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா வென்ற முதல் ஐசிசி தொடர் என்பது இதுவாகும். இதைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு இந்தத் தொடர் நடைபெற்றது. இதில் தோல்வியே தழுவாத இந்திய அணி நியூசிலாந்திடம் பைனலுக்கு சென்று தோற்றது.
2002 ஆம் ஆண்டு இந்த தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப் போட்டி மழை காரணமாக தடையான நிலையில் ரிசர்வ் டேவில் அறிவிக்கப்பட்டது. அப்போதும் மழை குறுக்கிட்டதால் இந்தியாவும் இலங்கையும் இந்த கோப்பையை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்தியா வென்ற முதல் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இதுதான். 2004 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இங்கிலாந்தும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பல பரிட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், இந்தியாவும் பலபரீட்சை நடத்தியது. இதில் இந்திய அணி தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஒரு நாள் தொடரில் இந்திய அணி கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை என்றால் அது இதுதான்.
இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மீண்டும் இங்கிலாந்தில் நடந்தது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இந்திய அணி இரண்டு முறை ரன்னர் அப் ஆகவும், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அதேபோன்று நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஒரு முறை இந்த தொடரை வென்று இருக்கிறது.