தூ என்று துப்பி பந்தை சேதப்படுத்திய விவகாரம்... சஸ்பென்ஷனை எதிர்த்து சண்டிமால் அப்பீல்
Recommended Video

லண்டன்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு டெஸ்ட் தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார் இலங்கை கேப்டன் சண்டிமால்.
இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ட்ராவில் முடிவடைந்தது.

இப்போட்டியின் இரண்டாம் நாள் மாலை, இலங்கை கேப்டன் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக கூறி போட்டி நடுவர்கள் மூன்றாம் நாள் காலை பந்தை மாற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் நாள் காலை சுமார் 2 மணிநேரம் இலங்கை வீரர்கள் களத்திற்கு வராமல் வாக்குவாதம் செய்தனர். முடிவில் பந்து மாற்றப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டம் இரு தரப்புக்கும் முடிவு இன்றி ட்ராவில் முடிந்தது.
போட்டியின் முடிவில் ஆட்டத்தின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் விசாரணை நடத்தி சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக உறுதி செய்து அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தார்.
இரண்டாம் நாள் மாலை பதிவான வீடியோவில் சண்டிமால் தனது பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டு பின்னர் அவர் உமிழ்நீரால் பந்தை பளபளப்பாக்கினார். இதன் காரணமாகவே அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சண்டிமால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஐசிசியில் அப்பீல் செய்துள்ளார். அவர் என்ன பொருளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. மேலும் அன்றைய தினம் அவரது பாக்கெட்டில் என்னவெல்லாம் இருந்தது என்பதையும் தெளிவாக கண்டறிய ஐசிசியிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. இதனை மனதில் கொண்டே சண்டிமால் மேல் முறையீடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications