சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தை சென்னையில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக உலக அளவில் புகழ்பெற்ற டி20 லீக் தொடராக ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் விளங்குகிறது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தத் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவதன் மூலம், இந்தியச் சந்தையில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த ஆஸ்திரேலிய வாரியம் விரும்புகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழு ஒன்று சென்னைக்கு வருகை தந்தது. அவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஷ் லீக் தொடரின் முதல் போட்டியைச் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்துத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய அதிகாரிகளின் விருப்பத்தைக் கேட்டறிந்தோம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை நடத்த அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இது தொடர்பான இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மட்டுமே எடுக்க முடியும் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டோம். பிசிசிஐ அனுமதி வழங்கினால் மட்டுமே எங்களால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலிய வாரியம் திட்டமிடுகிறது. குறிப்பாக, நடப்புச் சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இந்தப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் இடையில் வெறும் இரண்டரை மணி நேர வித்தியாசமே உள்ளது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற நேரத்தில் போட்டியை ஒளிபரப்ப முடியும் என்பதால் சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இது தொடர்பான முடிவு பிசிசிஐ வசம் உள்ளது. வழக்கமாக வெளிநாட்டு லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதற்கு பிசிசிஐ அவ்வளவு எளிதில் அனுமதிப்பதில்லை. இருப்பினும், ஆஸ்திரேலிய வாரியத்துடனான உறவு மற்றும் வணிக ரீதியான காரணங்களுக்காகப் பிசிசிஐ இதற்குச் சம்மதம் தெரிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.