சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இன்றையப் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியை வென்றால் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதோடு, புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முக்கிய வீரர்களான தீக்சனா மற்றும் பதிரானா இருவரும் சென்னை அணியில் இணைந்துள்ளனர்.

அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி களமிறங்குவதால், சிஎஸ்கே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய சென்னை, லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. சென்னை அணி சுமார் 220 ரன்கள் விளாசியும், சுழற்பந்துவீச்சாளர்களால் மட்டுமே சென்னை அணி வெற்றிபெற்றது. வழக்கமாக சுழற்பந்துவீச்சுக்கு சேப்பாக்கம் மைதானம் சாதகமாக இருக்கும் என்றாலும், 200 ரன்கள் வரை இரு அணிகளும் குவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழக்கமாக முதலில் பேட்டிங் செய்யும் அணி தரமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு 150 ரன்கள் விளாசினாலே வெற்றிக்கு போதுமான இலக்காக அமையும். ஆனால் கடந்த போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்களை விளாசியதால், பிட்ச் பற்றி பேச்சுகள் அதிகமாகின. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் பிட்ச் ரன்கள் சேர்ப்பதற்கும், சுழலுக்கும் சாதகமாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடற்கரை காற்று மைதானத்திற்கும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் பந்துவீச்சு எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ள 68 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் ஆடிய அணி 26 முறையும், 2வது பேட்டிங் செய்த அணி 42 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல் இரு அணிகளிலும் தரமான பந்துவீச்சாளர்கள் இருப்பதால், பேட்மேன்களின் கைகளில் தான் போட்டி முடிவு அமையும்.