3 முறை டைட்டில் வெற்றி
கடந்த 2008ல் ஐபிஎல் சீசன் துவங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே மிகவும் வலிமையான அணியாக வலம்வந்து கொண்டுள்ளது. இடையில் இரண்டு ஆண்டுகள் தவிர்த்து மற்ற 10 ஐபிஎல் சீசன்களிலும் பிளே-ஆப் சுற்று வரையிலாவது அந்த அணி வந்துவிடும். மேலும் 3 முறை டைட்டிலையும் வென்றுள்ளது சிஎஸ்கே.
பல்வேறு நெருக்கடிகள்
இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது சிஎஸ்கே. மற்ற அணிகளை போலவே டைட்டில் கனவுடனேயே சிஎஸ்கே யூஏஇக்கு பயணம் மேற்கொண்டது. மற்ற அணிகளை தாண்டி ஒருபடி மேலே யூஏஇ புறப்படுவதற்கு முன்பே சென்னையிலேயே பயிற்சி முகாமையும் வடிவமைத்தது.
சாத்தியப்படாத வெற்றி
ஆனால் எல்லா முயற்சியும் கானல் நீராக ஆனது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அணியிலிருந்து விலகியது, வீரர்களுக்கு கொரோனா பாதித்தது, குறைந்த நாட்களே பயிற்சி என அந்த அணி தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், வெற்றியை சாத்தியப்படுத்த முடியாமல் திணறியது.
தகர்ந்த பிளே-ஆப் கனவு
இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. இதனிடையே, நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டு 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதையடுத்து சிஎஸ்கேவின் பிளே-ஆப் கனவு தகர்ந்துள்ளது.
வெளியேறும் முதல் அணி
இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனிலிருந்து வெளியேறும் முதல் அணியாக சிஎஸ்கே உள்ளது. இதனிடையே பிளே-ஆப்பிற்கு செல்ல முடியாத நிலை வருத்தமளிப்பதாக தோனி தெரிவித்துள்ளார். நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து பேசிய அவர், கிரிக்கெட்டை நேசித்து விளையாடுவதாகவும் இந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு இளைஞர்கள் கொடுத்துள்ள முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.