டோணி வரப் போகிறார்.. வாயை ரெடியா வச்சுக்கோங்க.. பெரிய விசில் போடுவதற்கு!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டோணி தங்களது அணியில் இணைந்து கலக்குவார் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளது. டோணியை மீண்டும் சென்னை சீருடையில் பார்க்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது.
மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய இரு வருடமும் அது போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேறு அணிகளுக்கு மாறி ஆடினர்.
கேப்டன் டோணி புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்தார். தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இதனால் டோணி மற்றும் இதர சென்னை வீரர்களை மஞ்சள் சீருடையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

கேப்டன் டோணி பராக்
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணியை மீண்டும் சேர்க்கவும், கேப்டனாக்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தவர் டோணி. சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்று கொடுத்தவர்.

டோணி வருவார்
டோணி நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறுவார் என அணி நி்ர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ஸ்டீபன் பிளமிங்கையே நியமிக்கவும் அது விரும்புகிறது.

புனே ஒப்பந்தம் முடிந்ததும்
புனே அணியுடன் டோணி போட்டுள்ள ஒப்பந்தம் இந்த ஆண்டு கடைசியில்தான் முடிகிறதாம். எனவே அதுவரை அதிகாரப்பூர்வமாக டோணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேச முடியாது. இருப்பினும் சாதாரண முறையில் அவருடன் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேசவுள்ளதாம்.

அதே குரூப் அப்படியே திரும்பி வரும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ராஜாக்கள் எல்லாம் மீண்டும் அப்படியே திரும்பி வருவார்கள் என்ற அந்த அணி உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதன் படி பார்த்தால் டோணி, பிராவோ, அஸ்வின் உள்ளிட்ட அத்தனை பேரும் மீண்டும் சிந்தாமல் சிதறாமல் திரும்பி வருவார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications