ஏமாற்றிய மிடில் ஆர்டர்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியில், ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் ரன்கள் அடிக்க ரொம்பவே சிரமப்பட்டனர். குறிப்பாக, ராஜஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய ருதுராஜ், இப்போட்டியில் பந்துகளை அடிக்க ரொம்பவே சிரமப்பட்டார். 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், அர்ஷ்தீப் சிங் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய மொயீன் அலி, 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், அதே அர்ஷ்தீப் ஓவரில் கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த சில போட்டிகளாக எதற்காக விளையாடுகிறோம் என்பதையே மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் மொயீன் அலி, அடுத்து வந்த உத்தப்பா வெறும் 2 ரன்களில் ஜோர்டன் பந்தில் மெத்தனமான ஷாட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய ராயுடுவும் 4 ரன்களில் அவுட்டானார்.
வியக்க வைத்த ராகுல்
இதையடுத்து களமிறங்கிய தோனி ரவி பிஷ்னாய் ஓவரில் 12 ரன்களில் போல்டாகி வெளியேறினார். ஒருபக்கம், தனி ஆளாக நின்று போராடிக் கொண்டிருந்த டு பிளசிஸ், அரைசதம் அடித்து, 19வது ஓவரில் தான் முதல் சிக்ஸரை அடித்தார். இந்த போட்டியில் சென்னை அடித்த முதல் சிக்ஸ் இதுதான். 19 ஓவரில் சென்னை ஐந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்து பவுண்டரி, இரண்டாவது பந்து சிக்ஸ் அடித்த டு பிளசிஸ், 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் லோகேஷ் ராகுல் அதே பிட்சில் 42 பந்துகளில் 98 ரன்களில் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 233.33. அதாவது, 135 ரன்கள் டார்கெட்டில் அவர் அடித்தது மட்டும் 98 ரன்கள். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிகபட்ச ஸ்கோர் 13 ரன்கள் தான். பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் அந்த 12 புள்ளிகளுடன் -0.001 ரன் ரேட் பெற்றுள்ளது.
தோனி அதிருப்தி
இந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி, டாஸ் தோற்றது குறித்தும் பேசியிருந்தார். எனினும், இந்த தோல்வி சென்னை அணியை மன ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. துபாய் பிட்ச் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், லோகேஷ் ராகுல் சிஎஸ்கே பவுலர்கள் பந்துகளை சிதறடித்து இருக்கிறார். 8 சிக்ஸர்கள் தாறுமாறாய் பறந்துள்ளன. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு, ஓய்வறையில் தோனி வீரர்களிடையே சற்று ஆக்ரோஷமாக பேசியிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, சில சீனியர் வீரர்களிடம் தோனி தனது அதிருப்தியை கடுமையாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். தோனி ஒரு கேப்டனாக அணி வீரர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தும் அதே வேளையில், தோனி தனது பேட்டிங் திறன் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஸ்லோவான ரன் ரேட்
கடைசி இரு போட்டியிலும் சென்னை 140 ரன்களை தாண்டவில்லை. டெல்லிக்கு எதிராக 136 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, இன்று பஞ்சாபுக்கு எதிராக எடுத்த ரன்கள் 134. சென்னை செய்யும் மிகப்பெரும் தவறு, டாப் ஆர்டர் பேட்டிங்கை மட்டுமே நம்பியிருப்பது தான். மிடில் ஆர்டர் இந்த தொடரில் டோட்டல் ஃபெயிலியர் ஆகியிருக்கிறது. லோ ஆர்டரில், ஜடேஜா மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். ருதுராஜும், டு பிளஸிஸும் அடிக்கவில்லை எனில், கண்களை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் சென்னை தோற்றுவிடும் என்று. இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை, தொடக்க வீரர்கள் ஓரளவு விளையாடி அவுட்டான பிறகு, மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் அடுத்த கியருக்கு ஆட்டத்தை மாற்றி ரன்களை அதிகரிக்க வேண்டும். ஆனால், அவர்களோ, தொடக்க வீரர்களை விட ஸ்லோவான ரன் ரேட்டில் விளையாட, அங்கேயே சென்னையின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிடுகிறது.
ஸ்லாட்டில் விழுந்தால் சிக்ஸ்
மிடில் ஓவர்களில் சொதப்பிவிட்டு, கடைசி 3 ஓவர்களில் ரன்களை அடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இது ஏழெட்டு வருட பழைய ஃபார்முலா. இன்னமும் தோனி ஆர்மி இதைத் தான் ஃபாலோ செய்து வருகிறது. பவுலர்கள் இப்போது ரொம்பவே டெக்னிக்கலாக முன்னேறிவிட்டார்கள். குறிப்பாக, தோனி போன்ற பழைய 'கை'களுக்கு கடைசிக் கட்டத்தில் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே யார்க்கர் போட்டாலே போதும்.. கட்டுப்படுத்திவிடலாம் என்பது தெரியாத பவுலர்களே இருக்க முடியாது. ஸ்லாட்டில் விழும் பந்துகளை மட்டுமே தோனியால் சிக்ஸர் அடிக்க முடியும். அப்படி கடைசி மூன்று ஓவரில் ஏதாவது ஒரு பந்து தான் ஸ்லாட்டில் விழும். அப்படி விழவில்லை எனில்.. கோவிந்தா தான்.
உணர்ச்சிவசப்பட்ட தோனி
ஸோ, முதல் அணியாய் பிளே ஆஃப் முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்று போட்டிகளை அடுத்தடுத்து தோற்கும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற குறைகளை சென்னை அணி பிளே ஆஃப்க்குள் களையவில்லை எனில், இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாது. இதனை தோனியும் நன்கு உணர்ந்தே வைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே, இன்று அவர் வீரர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்திய கோபம் என்று கூறப்படுகிறது.